Monday, 6 January 2014

எனது முதல் கிறுக்கல்(கதை)



கடவுளின் கண்ணீர்
          கதை ஒரு கற்பனை கனவாக இருக்கலாம். ஆனால் தானும் அதை எழுத வேண்டும் என்பது பலருக்கும் கனவு. கை விரல்களுக்கு இடையில் கதை எழுத நினைத்தவர்கள் கணக்கில் நானும் உண்டு. ஆனால் என் எழுதுகோலுக்கு எரிபொருளாக அமைந்தது ஒரு கடவுளின் கண்ணீர். இந்த காணப்பட்ட நிஜம் வெறும் கதையாக மட்டும் இருந்து விட கூடாது.

செல்லும் இடமெல்லாம் செக்கு மாடு போல் நில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தில் அன்றைய விடியலில் வித்தியாசம் இல்லை. என்றும் காலை 9 மணிக்கு 10-ம் நிறைமாத கர்ப்பிணியாக ஓயாத சாலை நெரிசலில் ஓரமாக சென்றுக் கொண்டிருக்கும் அரசு பேருந்துகள். ஒரு பேருந்து மட்டும் கூட்டம் அதிகமாக இல்லாமல் அமைதியாக அந்த நிறுத்தத்தில் வந்து நின்றது. அந்த ஓலக்குரலை கேட்க விரும்பாத ஈரமுள்ள மக்கள் ஏறவில்லையோ என்னவோ?

கூட்டமில்லாத காரணத்தால் ஒரு வித குதூகலத்தோடு நானும் அந்த பேருந்தில் ஏறி பயணச் சீட்டு வாங்க பின் சீட்டிலிருந்து ஒரு ஓலக்குரல் என் ஒரு பக்கத்துக்கு காதில் ஒலித்தது. ஓசை வந்த திசையில் நானும் திரும்ப, பேருந்தின் பின் சீட்டில் முதுமை எய்திய ஒரு முதுமகள். அவளது அழுகுரல் ஓயாது ஒலிக்க, அவளது அருகில் உள்ள ஒரு பெண் அவளை அமைதியாக இருக்க சொல்லி அதட்டுகிறாள். சோகத்தை சொல்ல முடியாத அந்த முதுமகள் ஒப்பாரியை மட்டும் பதிலாக வைக்கிறாள். அந்த ஒப்பாரியில் தன் மக்களை வளர்த்த அருமை பெருமைகளை அட்டவணை படுத்துகிறாள். தான் பட்ட கஷ்டத்தை எண்ணி கதறி அழ கூட அனுமதி இல்லாமல் மனதுக்குள் புலம்புகிறாள்.

"அந்த மகன் வீட்டில் கொண்டு விட்றேன். அது வசதியான வீடு. அங்க போய் இருந்துக்கோ, அதுவரை அமைதியாக இரு" என்று கடிந்து கொள்கிறாள் அருகிலுள்ள அந்த பெண்மணி. அந்த வீட்டை நினைக்க, இன்னும் அழுகை பீறிட்டு கொண்டு வர அந்த தாயின் அழுகுரல் அலைகடலைப் போல அமைதி இல்லாமல் ஒலித்துக்கொண்டே வருகிறது.

நான் இறங்கும் இடம் வந்து விட என் இதயம் மட்டும் அந்த பேருந்திலே பெரிய பாரத்துடன் நிற்கிறது. அந்த ஒதுக்கபட்டவளின் ஓலக்குரல் ஒரு புறத்து காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது.

முதியோர்களால் முற்றுகை இடப்பட்ட முதியோர் இல்லத்தை விட கொடுமையானது, மாத மாதம் ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டை நோக்கி பெற்றவர்கள் எடுக்கும் இந்த படையெடுப்பு.

கட்டிய மனைவிக்கும், கட்டப்பட்ட நாய்க்கும் வீட்டில் இடம் இருக்கும் பொது கருவில் உருவாக்கிய கடவுளுக்கு காணி நிலமில்லை.

ஒரு தாய்க்கு ஐந்து குழந்தைகள் வளரும்பொது பாரமாக தெரியாத பொது, ஐந்து குழந்தைகளுக்கு மட்டும் ஏன் ஒரு தாய் பாரமாக தெரிகிறாள்?

அஞ்சு குழந்தைகளைப் பெற்றவள் அனாதையாக அழுகிறாள் அரசு பேருந்தில்.

-செல்வம் வாசு